மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் ஐந்து – தேவன் இருக்கிறார்

ஆதி. 1:1—ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ரோ. 1:20—எப்படியென்றால் காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்கு சொல்ல இடமில்லை.

உலகத்தில், வேதம் ஒப்பற்ற புத்தகம் ஆகும். வேதத்தில் வழங்கப்படும் முதல் கருப்பொருள், தேவன். இந்தத் தேவனே வேதத்தின் முக்கிய கரு. வேதத்திலுள்ள முதல் வசனம், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று கூறுகிறது. விஞ்ஞானிகள் நம் பெளதிகப் பிரபஞ்சத்தைப் பற்றி நீண்ட காலமாக ஆய்வுசெய்திருக்கின்றனர். நமது பிரபஞ்சம் முழு வடிவமைப்புடன் விளங்கும் ஓர் ஒழுங்கான அமைப்புமுறை என்று அவர்கள் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண்டுபிடித்திருக்கின்றனர். வேதம் தேவனைப் பற்றி என்ன கூறுகிறது என்று நாம் பரிசீலிப்பதற்கு முன்பு, இந்தப் பிரபஞ்சம் தேவனைப்பற்றி என்ன கூறுகிறது என்று முதலில் நாம் பரிசீலிக்கலாம்.

பிரபஞ்சத்தின்மூலம் தேவன் அறிவிக்கப்படுதல்

உங்களுக்கு மேலே இருக்கிற வானத்தை இரவு நேரத்தில் பாருங்கள். நம் நட்சத்திர மண்டலத்தில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாகவும், பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். நாம் பார்க்கிற ஒவ்வொரு நட்சத்திரமும் பிரபஞ்சத்தில் ஒரு சூரிய குடும்பத்தைப் பிரதிநிதிப்படுத்துகிறது. நாம் வாழ்கிற சூரியக் குடும்பம் சூரியனை மையமாகக் கொண்டுள்ளது, கடிகாரத்தைப் போல துல்லியமாக அதனைச் சுற்றி வருகிற ஒன்பது கோள்களைக் கொண்டுள்ளது. அந்தக் கோள்களில் ஒன்றான பூமி விண்வெளியில் மணிக்கு 67,000 மைல்கள் வேகத்தில் செல்கிறது, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதன் வேகத்திற்கு ஆயிரத்தில் ஒரு பங்கு வேகம் பயணிக்கும் ஒரு ரயில், பலமுறை அதற்கான குறித்த நேரத்தைத் தவறவிடுகிறது என்பதை ஒருவன் கருதும்போது, இந்த உண்மை பிரம்மிப்பூட்டுகிறது.

வரலாறு முழுவதும், சில நேரங்களில் சிலர் தேவன் என்ற கருத்தையே எதிர்த்தனர். அவர்கள் எதிர்த்தனர் என்பதேகூட, தேவன் இருக்கிறார் என்பதைக் கூறுகிறது. சில கலகக்கார மகன்கள் தங்கள் தகப்பனை மறுக்கின்றனர் என்பதேகூட, அவர்களுக்கு ஒரு தகப்பன் உண்டு என்று கூறுகிறது. சிலர் குடும்பத்தை இடித்துப்போட முயற்சிப்பதேகூட, குடும்பம் ஒரு நிஜம் என்பதைக் கூறுகிறது. குறிப்புணர்தல் விதி நமக்குக் கூறுவது என்னவென்றால், ஒருவன் ஒரு காரியத்தை எதிர்த்தால், அவன் அந்தக் காரியம் இருப்பதை முதலில் முன்அனுமானிக்கிறான் என்பதே. தேவன் என்ற கருத்தை எதிர்ப்பது பயனற்றது என்று வரலாறு நிரூபித்துள்ளது, காரணம், கலாச்சாரங்களும் மனித அரசாங்கங்களும் எப்படி மாறினாலும் சரி, முடிவாக தேவனில் உள்ள நம்பிக்கையே எப்போதும் மேலோங்குகிறது.

தேவனைக் குறித்துப் பிரபஞ்சம் என்ன கூறுகிறது என்பதை இப்போது நாம் பரிசீலிக்கலாம். தேவனின் “நித்திய வல்லமையும் தெய்வீகக் குணாதிசயங்களும்” சிருஷ்டிப்பின்மூலம் காணப்படுகின்றன என்று வேதம் நமக்குக் கூறுகிறது (ரோ. 1:20, கிரே.). ஓர் ஓவியம் அதை வரைந்த ஓவியரின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறதுபோல, சிருஷ்டிகரின் குணாம்சங்கள் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மூலம் வெளியரங்கமாக்கப்படுகின்றன.

மனுக்குலத்தின் மூலம் தேவன் வெளிக்காட்டப்படுதல்

மனுக்குலம் இருக்கிறது என்ற உண்மையேகூட தேவன் இருக்கிறார் என்பதைப் பேசுகிறது. மனித சரீரம் மெய்யாகவே ஆச்சரியமானது. நவீன மருத்துவம் மனித உறுப்புகளையும், கை கால்களையும் பாவனை செய்கின்ற, அவற்றை இடமாற்ற முயல்கின்ற பல இயந்திரங்களைக் கண்டுபிடித்தாலும்கூட, எந்த இயந்திரமும் மனித உறுப்புகளின் திறனுக்கும், வீரியத்திற்கும் நெருங்கி வர முடியாது. ஒருவர் விழித்திருக்கையிலும் சரி தூங்குகையிலும் சரி, நிமிடத்துக்கு 72 முறை, அல்லது ஆண்டுக்கு 40 மில்லியன் முறை மனித இருதயம் துடிக்கிறது. ஒரு முதிர்ச்சியடைந்த நபரின் இருதயம் ஒவ்வொரு நாளும் 1,00,000 மைல்களான இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை அனுப்புகிறது, இது உலகத்தை நான்குமுறை சுற்றி வருவதற்குப் போதுமானது. இது ஒவ்வொரு நாளும் 2,000 கேலன் கொள்ளளவு உடைய வண்டியை நிரப்ப போதிய இரத்தத்தை விசையியக்கம் (pump) செய்கிறது. இப்படிப்பட்ட ஓர் அற்புதமான உறுப்பை மனிதனுக்குள் யார் வடிவமைக்க முடியும்? ஒருவன் தன் உடம்பிலுள்ள இரத்தச் சிவப்பணுக்களைக் குவிக்க முடிந்தால், அதின் உயரம் எவரெஸ்ட் சிகரத்தைவிட ஐயாயிரம்முறை உயரமாக இருக்கும்! மூக்கு நிமிடத்துக்கு பதினேழுமுறை காற்றை உள்ளிழுக்கிறது. அது, ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 14,000 லிட்டர் காற்றைப் பதனிட வேண்டியிருக்கிறது. அந்தக் காற்றின் வெப்பத்தைச் சரிசெய்வதுடன்கூட, அதின் ஈரத்தன்மையைப் பக்குவப்படுத்தி, அதன் தூசியை வடிகட்டவும் வேண்டும். இந்த மூன்று செயல்பாடுகளையும் கையாளும்படி மனிதன்-உண்டாக்கக்கூடிய இயந்திரம் நூறு பவுண்டு எடையுள்ளதாக இருக்கக்கூடும். இப்படிப்பட்ட “மனிதன்-உண்டாக்கிய மூக்கு” நம் முகத்தில் பொருத்தப்படுவதாயிருந்தால் அது எப்படி இருக்கும்? இவை மனித உடம்பிற்குரிய அற்புதங்களில் சில உதாரணங்கள் மட்டுமே. நாம் ஒரு கண்ணாடிக்குமுன் நின்றால், வேதத்தில் சங்கீதக்காரன் கூறியுள்ளதை நாம் ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியாது: “நான் பிரமிக்கத்தக்க வகையில் அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியினால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவை, அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங். 139:14).

வேதவாக்கியங்களில் தேவன் வெளிப்படுத்தப்படுதல்

தேவனின் பட்டப்பெயர்களை வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் தேவனுக்கான பல பட்டப்பெயர்களில், பிரதானமாக மூன்று மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன—ஏலோஹிம், யெகோவா, அடோனாய். ஏலோஹிம் என்பது எபிரெய மொழியில் பன்மைப் பெயர்ச்சொல். இது “உண்மையுள்ள, பலமான ஒருவர்” என்கிற கருத்தை மறைவாகக் காட்டுகிறது. தேவன் பலமானவர், உண்மையுள்ளவர். அவர் வலிமையில் பலமானவர், வார்த்தையில் உண்மையுள்ளவர். யெகோவா என்பதற்கு “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று அர்த்தம், இது தேவன் தாமாக இருக்கிறவர், என்றென்றும் இருக்கிறவர் என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் கடந்த காலத்தில் இருந்தவர், நிகழ்காலத்தில் இருக்கிறவர், எதிர்காலத்தில் வரப்போகிறவர். அடோனாய் என்பதற்கு “எஜமான்” என்றும், “கணவன்” என்றும் அர்த்தம். ஒரு பக்கத்தில், தேவன் மனிதனின் எஜமான், மறுபக்கத்தில் அவர் மனிதனின் கணவர். புதிய ஏற்பாட்டில் பிதா, கர்த்தர், இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி போன்ற வேறு பல பட்டப்பெயர்கள் உள்ளன. இவையனைத்தும் தேவன் என்னவாக இருக்கிறார், தேவன் யார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாத் தீர்க்கதரிசிகளும் தேவனால் ஏவப்பட்டுப் பேசினர் (1 பேது. 1:10-11; 2 பேது. 1:21). தேவனே அவர்களின் வாயில் தீர்க்கதரிசன வார்த்தைகளை அருளினார். கர்த்தர் சொல்லுகிறதாவது என்கிற சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் அடிக்கடி மீண்டும் மீண்டும் பேசப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளின் ஞானமும் அவர்களது தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமும், அவர்களது வார்த்தைகள் தெய்வீக ரீதியில் ஏவப்பட்டவை என்பதை நிரூபித்துள்ளன. மிகப் பெரிய தீர்க்கதரிசனங்களில் ஒன்று இஸ்ரயேல் தேசத்தின் முடிவைப் பற்றியது. யூதர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்படுவார்கள், ஆனாலும் நியமிக்கப்பட்ட காலத்தில் இஸ்ரயேல் தேசம் மறுசீரமைக்கப்பட்டு, எருசலேம் நகரம் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் என்று வேதம் தீர்க்கதரிசனம் உரைத்தது. 1948இல் இஸ்ரயேல் மறுசீரமைக்கப்பட்டதையும் 1967இல் எருசலேம் யூதர்களுக்குத் திரும்ப தரப்பட்டதையும் நம்முடைய காலத்திலேயே நாம் காண முடிகிறது. மத்தியக் கிழக்கில் இந்தக் குட்டி தேசத்தை ஸ்தாபித்தல், வரலாற்றில் தேவனின் வேலைக்கு ஒரு ஜீவிக்கிற நிரூபணமாக உள்ளது.

மனிதனுக்கான தேவனுடைய திட்டம்

[தேவனின் நோக்கம்] நாம் அவரை அறிய வேண்டும் என்பதே. தம்மையே மறைத்துக்கொள்ளும் நோக்கம் தேவனிடம் இல்லை. மனிதன் முதலாவது அவரைச் சிருஷ்டிகராகவும், பின்பு அவனுடைய தேவனாகவும், அவனுடைய பிதாவாகவும் அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் உத்தேசிக்கிறார்.

மனிதன் தம்மை தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் உத்தேசிக்கிறார். ஆவியிலும், நிஜத்திலும் தம்மைத் தொழுதுகொள்கிற உண்மையான தொழுதுகொள்பவர்களை தேவன் நாடுகிறார் என்று யோவான் 4:23 கூறுகிறது. அவரால் சிருஷ்டிக்கப்பட்ட காரியங்களை மனிதன் தொழுதுகொள்ள வேண்டும் என்ற நோக்கம் தேவனிடத்தில் இல்லை. தேவனை உண்மையாய்த் தொழுதுகொள்வதென்றால், நம் ஆவியோடு தொழுதுகொள்வதாகும். கடந்த காலத்தில், மனிதன் தேவனுக்குப் பதிலாக பல விக்கிரகங்களை உண்டாக்கி, அவற்றை தொழுது கொண்டான். ஆனால், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டிலும், தேவன் எல்லாவிதமான விக்கிரக ஆராதனையையும் தடைசெய்தார் (யாத். 20:4-5; 1 கொரி. 10:14; 1 தெச. 1:9). அவர் ஒப்பற்ற தேவன். நம் ஆராதனையைக் கோர, வேறு எந்தப் பொருளும் தகுதியானதல்ல.

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் அவரை ஆவியில் தொழுது கொள்ள வேண்டும் (யோவான் 4:24). ஒருவர் வானொலி அலையைப் பெற விரும்பினால், அவர் வானொலி அலைவாங்கியைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் தொலைப்பேசி அழைப்பைப் பெற விரும்பினால், அவர் தொலைப்பேசியை எடுத்தாக வேண்டும். இதுபோல, ஒருவன் தேவனைத் தொழுது கொள்ளவும் அவரைத் தொடர்புகொள்ளவும் விரும்பினால், அவன் தன் ஆவியைப் பயன்படுத்தியாக வேண்டும். ஒருவன் தன் காதுகள் மூலம் நிறங்களைக் கேட்கவும் முடியாது, கண்களால் இசையைப் பார்க்கவும் முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும், அதற்கேற்ற ஒரு நேர்த்தியான உறுப்பு தேவை. தேவன் ஆவியாயிருக்கிறார், அவர் பெளதிக ரீதியான எதுவாகவும் இல்லை. இதனால்தான், நாம் எந்தப் பெளதிக பொருளைக் கொண்டும் அவரை தொழுதுகொள்ளக்கூடாது, மாறாக, நம் ஆவியைக் கொண்டு அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு ஜெபிப்பதே (ரோ. 10:12-13), நம் ஆவியைப் பயன்படுத்துவதற்கான வழி. நாம் நம் வாயையும் நம் இருதயத்தையும் திறந்து தேவனிடம் ஜெபித்தால், நம் ஆவி அவரைத் தொடும், அப்போது, தேவன் நமக்கு நிஜமாக இருப்பார்.

மனிதன் தேவனை வெளிக்காட்டுவதே, மனிதனுக்கான தேவனுடைய இறுதித் திட்டம். தேவனை வெளிக்காட்டுவதற்கான வழி, தேவனைக் கொண்டு நிரப்பப்படுவதே. நாம் அவரிடம் ஜெபித்து, அவரைப் பெற்றுக்கொண்டால், தேவன் நமக்குள் வந்து நம்மை நிரப்புவார். அவர் இனியும் நமக்கு வெளியே உள்ள புறம்சார்ந்த தேவனாக இருக்க மாட்டார், மாறாக, நமக்குள் உள்ள அகம்சார்ந்த தேவனாக இருப்பார். அவர் தம்மைக்கொண்டு நம்மை நிரப்பி, நம் முழு ஆள்தத்துவத்தையும் மாற்றுவார்.

கிறிஸ்தவனாக இருப்பது என்றால், வெறுமனே சில சமயக் கோட்பாடுகளை நம்புவதோ சில போதனைகளைக் கற்றுக்கொள்வதோ அல்ல. அது அவரை அறிந்துகொள்வதாகும், அவரை தொழுதுகொள்வதாகும், அவரைக்கொண்டு நிரப்பப்படுவதன் மூலம் அவரை வெளிக்காட்டுவதாகும். (There Is God, pp. 1-2, 4-7, 10-12, 15-17)

References: There Is God; CWWN, vol. 27, “The Normal Christian Faith,” ch. 2; CWWL, 1983, vol. 1, “The Five Great Mysteries in the Bible,” ch. 1

எம் பிதாவே, உம் படைப்பை காணும்போழ்
பிதாவைத் தொழுதுகொள்ளுதல்—
அவரது மாபெருந்தன்மை – 17

1 எம் பிதாவே, உம் படைப்பை காணும்போழ்,
வானம், பூமியும் என்னே ஆச்சர்யம்,
எண்ணில்லா சிறு பெரும் காரியங்கள்,
உம் வல்லமையைக் காண்பிக்கின்றதே;

என்னுள்ளமெல்லாம் துதிக்கின்றதே,
அற்புதரே, பெரியோரே!
நித்தியமாய் என்றென்றும் பாடுவேன்,
அற்புதரே, பெரியோரே!

2 இரட்சிப்பின் க்ருபை அனுபவிக்கையில்,
உம் மகன் ஈவை நான் தியானிக்கையில்,
எம்மைப் புதுப்படைப்பாக்க மரித்தார்,
ஜீவன் நிறைவாய் வெளிக்காட்டிட;

3 சபையில் ஆசீரில் பங்குபெரும்போழ்,
உம் ஜீவன் பெற்றோர், என்னே மா திரள்!
கட்டப்படுகின்றாரே உந்தன் வீடாய்,
உம்மை உள்ளடக்கி வெளிக்காட்ட;

4 வரும் பூரண யுகம் எதிர்பார்த்து
பங்கடைவேன் புது எருசலேம்,
புதுத்தன்மையில் வானம் பூமி எல்லாம்
அவைகளில் வெளியாகின்றீரே;